Saturday, November 21, 2009

பிறந்த நாள் பரிசு


சிறகடிக்கும் பட்டாம் பூச்சிகளை
சிறகடிக்கி மகிழ்கின்ற
காலங்கள்.
சின்னஞ் சிறு கைகளில்
பொதிகள் சுமந்தோம்
நீயும் நானும்
மாலை வகுப்பிற்காக.

சிறு சிறு மோதல்கள்
சாடும் வார்த்தைகள்
விரித்தன
இடைவெளியை
எம்மிடையே...
அந்நாட்களில்

இன்று நீ ஒரு தேசத்தில்
நான் மற்றொரு திசையில்
பிரிப்பவை தேசங்கள் மட்டுமல்ல
சமுத்திரங்களும் தான்.

எல்லைகள் கடந்து
பூத்தது நட்பு
எம்மிடையே
ஆம்!
இணையத்தினூடுதான் ...
வாடாத மலராய்
புத்துணர்வு கொள்கிறது
அனு தினமும்.

எதிரிகளாக இருந்தவர்கள்
நண்பர்களாகி,
உயிர் நண்பர்களாகி....

உணர்வுகள் மாறலாம்
உறவுகள் மாறலாம்
மனிதர்களும் மாறலாம்
என்றும் மாறாது
நட்பு ஒன்றே.

மோதல்களினால் காதல்!
தினம் திரையிலும்;
வீதிகளிலும்,
வாழ்விலும் காணலாம்.
மோதல்களினால் நட்பு
கண்டதுண்டோ!

வளர்த்தவர்கள்
நாம் இருவர்தான்!!



இன்று உன் பிறந்த நாள்
எட்டாத தூரத்திலும்,
எந்நேரமும் என்னுடனும்
இருக்கும் உனக்கு
என்ன தர
பரிசாக..!!

காலத்தாலும்
தூரத்தாலும்
பிரியாத
நட்பையும், அன்பையும்
கவிதையையும்
காணிக்கையாக்குகிறேன்.
ஏற்பாயா....!!!

-----எழில்.


No comments:

Post a Comment